இளைய தமிழகம் - உணர்வுள்ள தமிழ் இளைஞர்களின் இரண்டாவது சுதந்திரப்போர்....!!
"உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்...!" என்ற குரல் உலகம் முழுமைக்கும் ஒலித்த நாள்.
அந்த போற்றத்தக்க ஒருநாளில் உங்களையெல்லாம் சந்திப்பதில் இளைய தமிழகம் பெருமகிழ்வு கொள்கிறது.
"உணர்வுள்ள தமிழ் இளைஞர்களே ஒன்றுபடுங்கள் " என்ற குரலுடன்.
ஆம்.....
உணர்வுள்ள தமிழ் இளைஞர்களே ஒன்றுபடுங்கள்......இளைய தமிழகம் இனிவரும் தமிழகத்தை இனிய தமிழகமாக மாற்ற.
முடியுமா ? இல்லை வெற்றுக் கோஷமா இது ? சில நூறுபேர் சேர்ந்து கூடிக்கும்மியடித்து விட்டு ஏதோ பேருக்கு நான்கு பேர் கோஷம் போட்டுக் கொண்டு போகப்போகும் இன்னொரு இளைஞர் இயக்கமா என்ற கேள்வி உங்களுள் எழுவது இயல்பு. தவறில்லை. அந்தக் கேள்விக்கான பதிலை நாம் இணைந்தே காண்பது அவசியம்.
ஒரு நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகத்தை நான் திருத்திக்காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். முற்றிலும் சுயநல மயமாகிப் போய்விட்ட இந்த உலகில் தன்னலமற்ற அரசியல் தலைவர்களை இளைஞர்களாகிய நாம் புத்தகத்தில் மட்டுமே படித்திருக்கிறோம். சுயநலமற்ற ஓரிரு தலைவர்களையும் இன்றைய அரசியல் களநிலை தின்று கொழுத்துவிடுகிறது.
தமிழக அரசியல் நிலையோ இன்னமும் மோசம். அரசியல் கட்சிகள் யாரைப் பிரதிநிதிப்படுத்த வேண்டுமோ அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தாமல் , பெருவாரியான மக்களின் உணர்வுகளை மருந்துக்கும் மதிக்காமல் தமது சொந்த விருப்புக்களுக்கேற்ப செயல்படுகின்றன. அவ்வாறின்றி தமிழக அரசியலை திருத்த வேண்டும் , அரசியற் சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் பயணிக்கத் தயாரான பல ஒத்த கருத்துடைய இளைஞர்களின் கனவு அமைப்புதான் இந்த இளைய தமிழகம்.!
நமது இலக்கு..!
இளைய தமிழகம் இளைஞர்களால் வழிநடத்தப்படுவது. இளைஞர்களால் கட்டியமைக்கப்படப் போவது. முற்றிலும் பொதுநல நோக்குள்ள அரசியல் இயக்கமாக , சுயநலமற்ற இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் நடத்தப்படும் ஒரு அரசியல் இயக்கமாக , மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு அரசியல் இயக்கமாக , ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒரு அரசியல் இயக்கமாக , உலகெல்லாம் வாழும் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் பேரியக்கமாக வளர்ச்சி பெறுவதே அதன் இலக்கு. அதற்கான உரிய வகைகளைக் கண்டறிந்து அதன் அங்கத்தினர்களின் உதவியுடன் , இடையறாத பணிகளுடன் , அர்ப்பணிப்புடன் இளைய தமிழகத்தை வார்த்தெடுக்க உறுதி பூணுவோம்.
இளைய தமிழகத்திற்கான உந்துசக்தி!
மிக நீண்டநாட்களாகவே இளைஞர்கள் தமிழக அரசியலை விட்டுத் தள்ளிப் போய்விட்டார்கள். பண முதலைகள் தங்களது அதிகாரப் பசிக்காக விளையாடும் மைதானமாகவும் , சம்பாதிப்பதையே நோக்கமாகவும் கொண்ட அரசியல்வாதிகளின் களமாகவும் , பதவி , பணம் இவற்றைத் தேடுவதற்கு எவ்வித தகுதியுமில்லாதவர்களாலும் நீரம்பிக் கிடக்கிறது நமது அரசியல் சாக்கடை. அந்தச் சாக்கடை எவ்வளவு தூரம் நாறிக் கிடக்கிறது என்பதை சமீபத்திய ஈழ விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் நிகழ்த்திக்காட்டிய சதிராட்டமும் , முத்துக்குமாரனின் பிணத்தின் மீது நடத்திய அரசியலும் நமக்கு தெளிவாகவே உணர்த்துகிறது. இதுவே இத்தகையதொரு அமைப்பினை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தி.
ஆக , மாற்றத்தை விரும்பும் இளைஞர்களாகிய நாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்களைத் திரட்டவேண்டும். மக்களைத் திரட்ட மாபெரும் மனித சக்தி தேவை. அந்த மனித சக்தியை இணையம் மூலமாகவும் , களப்பணிகள் மூலமாகவும் திரட்டுவதே எங்கள் உடனடி இலக்கு. அந்த இலக்கினை அடைய ஒருவழியாகத் தான் இந்த வலைப்பூ, வளமான , தன்னிறைவுபெற்ற ,சுயமரியாதையுள்ள , இனவுணர்வு பெற்ற தமிழகத்தை உருவாக்க இணைவோம்! மாற்றத்திற்கான திறவுகோலை நாம் இணைந்தே வடிவமைப்போம்! மற்றபடி , எமது பணி வலைத்தளமல்ல. களமே எமது இலக்கு. !
பணமயமும் , ரவுடியிசமும் இணைந்தே பயணிக்கின்ற ஒரு அரசியல் களம் தற்போதைக்கு பரந்து கிடக்கிறது. புதிதான எந்தவொரு முயற்சியையும் அடக்கத்துடிக்கிற அரசியல் நிலையே இங்கே நீடிக்கிறது. அதனால் மிகுந்த அர்ப்பணிப்பும் , போர்க்குணமும் , இடைவிடாத முயற்சியும் , அஞ்சாமையுமே இளைய தமிழகத்தில் இணைய அடிப்படைத் தகுதிகள். வயதோ , பாலினமோ , நீங்கள் இருக்கும் இடமோ , உங்கள் மதமோ , உங்கள் சாதியோ , உங்கள் அரசியல் நிலையோ , வசதியோ , செய்யும் தொழிலோ , இவை எதுவுமே தடையில்லை. மூத்தவர்களின் அறிவுரையும் , இளைஞர்களின் ஆக்கப்பணியும் இளையதமிழகத்திற்குத் தேவை.....!
நம்புங்கள்.....!!! நம்மால் முடியும்....!!!
2 comments:
நான் எனது சக்கரை வலைப்பூவிலும் இணைத்து விட்டேன், மிக சிற்ந்த முயற்சி இளைய தமிழகம். வாழ்த்துகள்
இளைய தமிழகம் அனைவரின் செயலாக்கங்களையும் மனமுவந்து வரவேற்கிறது. அந்த வகையில் உங்கள் வலைப்பூவில் இணைத்ததற்கும் நன்றி.
உங்கள் ஆலோசனைகளையும் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி
ilayatn@gmail.com
Post a Comment